
புதிய சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கும்போது குழந்தைகள் வெட்கமடைகின்றனர். எனினும் சிலவேளை, ஆரோக்கியமான சமூக உறவுக்கு அதீத வெட்கம் தடையாக இருப்பதையும் மறுக்க முடியாது.
புதியதொரு சமூகத் தூண்டியைக் கையாள்வதற்கு தனி நபருக்கு உதவும் ஒரு மனவெழுச்சியே வெட்கம். ஒருவகையில் இது உளப் பொறிமுறை எனவும் கொள்ளலாம். இதில் ஆர்வம், அச்சம், பதற்றம் ஆகிய உணர்வுகளும் சிறிதளவு கலந்துள்ளன. அதீத வெட்கம் இதயத் துடிப்பின் அளவை அதிகரிப்பதோடு இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கலாம். குழந்தைகள் வெட்கப் படும்போது விரல்களை சூப்புவர் அல்லது புன்னகையுடன் விலகி ஓடுவர்.
வயது வளர்ச்சியுடன் வெட்க உணர்வு பல்வேறு வகையில் வெளிப்படுகின்றது. பிறந்ததிலிருந்து 2 வயது வரை வயதான புது முகங்களைக் காணும்போது பிள்ளைகளுக்கு அச்சம் கலந்த ஒருவித வெட்கம் ஏற்படுகின்றது. இரண்டாவது வயதில் அறிவு வளர்ச்சியடையும்போது சுய அடையாளத்துடன் கூடிய மனவெழுச்சி சார்ந்த வெட்கம் உருவாகிறது.
4 முதல் 5 வயதில் சுய உணர்வு சார்ந்த வெட்கம் ஏற்படுகின்றது. முன் கட்டிளமைப் பருவத்தில் எதிர்ப்பாலினரை எதிர் கொள்கையிலும் ஒருவகை வெட்க உணர்வு உருவாகின்றது.
பொதுவாக புதிய சமூக சூழல்க்ளே குழந்தைகளிடம் வெட்க உணர்வை உருவாக்குகின்றது.
ஏனையோரின் கவனம் தன் பக்கமே உள்ளது என குழந்தைகள் உணர்கின்றனர். சூழ்நிலைகள் அடிக்கடி மாறும்போதும் வெட்க உணர்வு ஏற்படுகின்றது. தமது பிள்ளைகள் குறித்து பிறர் தெரிவிக்கும் முறைப்பாடுகளுக்கு அதிகம் செவி சாய்க்கின்ற பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு குறைந்த சுதந்திரத்தை வழங்க முற்படுகின்றனர். இந்நிலையில் குழந்தைகளிடம் வெட்க உணர்வு அதிகரிக்கலாம்.
ஒப்பீட்டு ரீதியில் சில குழந்தைகளிடம் அளவுக்கு மிஞ்சிய வெட்க உணர்வு இருப்பதற்கான காரணம் என்ன? இதற்கு உளவியலாளர்கள் பல்வேறு விடைகளைத் தருகின்றனர்.
சில பிள்ளைகள் இயல்பாகவே அதிக வெட்க உணர்வு கொண்டுள்ளனர். தனியாள் வேறுபாடு இதற்கொரு காரணமாகும். சிலவகை வெட்கம் அறியப்படுகின்றது. அல்லது கற்கப்படுகின்றது. குழந்தை வெட்கத்தை தாம் வாழும் சூழலிலிருந்து கற்கின்றது. குடும்ப சூழல், கலாசாரப் பின்னணி, ஆன்மீக சூழல் என்பன இனத்திற்கு இனம், பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுகின்றது.
சுவீடன் நாட்டுக் குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளை விட வெட்கம் கூடியவர்கள் என ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. பெற்றோர்களே சிலபோது அளவுக்கு மீறிய வெட்க உணர்வை பிள்ளைகளிடம் வளர்க்கின்றனர்.
பரம்பரை அலகுகள் குழந்தைகளின் வெட்க உணர்வில் தாக்கம் செலுத்தலாம். அதேபோன்று கருக் குடும்பங்களிடம் வளர்க்கப்படும் குழந்தைகளிடம் ஒப்பீட்டு ரீதியில் வெட்க உணர்வு அதிகமாக இருக்கின்றது. தாயின் அல்லது தந்தையின் சமூகத் தன்மை குறைவாக இருந்தால், பிள்ளைகளின் சமூகத் தன்மையும் குறைவாக இருக்கக் கூடும்.
எனினும், அநேக ஆய்வாளர்கள் குழந்தைகளின் அதீத வெட்கத்தில் பரம்பரைக் காரணிகளின் தாக்கம் குறைந்தளவே உள்ளதெனக் கருதுகின்றனர். ஏனெனில், தத்தெடுக்கப்படுகின்ற குழந்தைகள் தத்தெடுத்த பெற்றோரின் நடத்தைகளையே பெரிதும் பிரதிபலிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே குழந்தை வளர்க்கும் முறையை குழந்தைகளின் வெட்க உணர்வில் அதிகம் தாக்கம் செலுத்துவது தெளிவாகின்றது.
அதீத வெட்க உணர்வினால் குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் எத்தகையது என்பதும் முக்கியமானது. சமூகத்துடன் பரிச்சயமாகி ஏனைய மனிதர்களுடன் இடை வினை ஆற்றுவதன் மூலமே அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும். சமூகத்தின் நெறிமுறைகளையும் விளங்கிக் கொள்ள முடியும்.
அதீத வெட்க உணர்வுள்ள குழந்தைகள் இடைவினையாற்று வதில் தயக்கம் காட்டுவதனால் இந்த அறிவையும் அனுபவத்தையும் பெற முடியாது போகின்றது. சமூகத் திறன்களை வளர்ப்பதும் தடைப்படும். பொதுவாக வெட்க உணர்வுள்ள பிள்ளைகளிடம் தன்னைப் பற்றிய ஒரு Poor Image தான் இருக்கும்.
சம வயதுக் குழுவினருடன் போட்டி போடும் மனப்பாங்கு குறைவாகவே இருக்கும். பள்ளிப் பருவத்தில் வெட்க உணர்வு கொண்ட பிள்ளைகளிடம் நட்புணர்வும் குறைவாக இருக்கும். வெட்க உணர்வு குறைந்த சகபாடிகளுடன் ஒப்பிடும்போது இவர்கள் பெரும்பாலும் மந்தமான (Passive) நிலையிலே இருப்பர். இதனால் சகபாடிகளால் ஒதுக்கப்படும் நிலை தோன்றும்.
கட்டிளமை, முதிர்ந்தோர் பருவம் வரை வெட்கம் தொடரும் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் எப்போதும் தனிமையில் இருப்பதாகவே உணர்கின்றனர். இந்நிலமைகள் ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன.
பெற்றோர் அதீதி வெட்க உணர்வு கொண்ட பிள்ளைகளை எவ்வாறு கையாளலாம்?
முதலில் தமது பிள்ளைகள் குறித்து முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் ஆர்வங்களுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை கௌரவிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்குவதற்கு தன்னம்பிக்கையை திட்டமிட்டு வளர்க்க வேண்டும்.
வெட்கம் கொண்ட பிள்ளைகளிடம் எதிர்மறையான உணர்வுகளும் தன்னைப் பற்றிய Poor Image இருக்கும். எனவே, அவர்களிடம் சுய மதிப்பை கட்டியெழுப்ப வேண்டும். வழங்கப்படும் சுதந்திரத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமும் சுயாதீனத்தை ஊக்குவிப்பதன் மூலமும் பாராட்டுவதன் மூலமும் இந்த சுய மதிப்பை கட்டியெழுப்பலாம்.
சமூகத் திறன்களை மேம்படுத்தல்: சமூக நடத்தைகளை மீள வலியுறுத்துவதன் மூலம் சமூகத் திறன்களை வளர்க்க வேண்டும். ஆம், என்னாலும் முடியும்' என்ற தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு சமூகத்தினுள் குழந்தை பங்கு கொள்ளும் நுட்பங்களைக் கையாள வேண்டும். சமவயதுக் குழந்தைகளுடன் விளையாடும் சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். புதிய புதிய வயதுக் குழுக்களுடன் இணைந்து செயற்படும் நிர்ப்பந்தங்களையும் தோற்றுவிக்கலாம்.
ஒரு பிள்ளை தனக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் சூழ்நிலை ஒன்றுக்குள் பிள்ளையைத் தள்ளி விடுவது சமூக ஆற்றலைக் கட்டியெழுப்ப உதவாது. மாறாக சமூக இடைவினைகள் மூலம் தனக்குப் பாதுகாப்பும் அங்கீகாரமும் அதிகம் கிடைக்கும் என குழந்தையை உணரச் செய்வதுதான் பெற்றோரின் பொறுப்பு.
0 comments:
Post a Comment